ஏழரை அடி லோக நாயக சனீஸ்வரர்.. அட்சய பாத்திரம் தாங்கிய அம்மன்..!!

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்...!!
திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளம் என்னும் ஊரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் புலியகுளம் என்னும் ஊர் உள்ளது. புலியகுளத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இக்கோயில் மூலவரான அன்னை மாரியம்மன் பின்னிரு கரங்களில் நாகம் மற்றும் உடுக்கை ஏந்தியும், முன்னிரு கரங்களில் சூலம் மற்றும் அட்சய பாத்திரத்தை தாங்கியும் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். இவளை வழிபடுவோரின் வாழ்வில் இன்னல்கள் எல்லாம் தீரும் என்பது நிச்சயம்.
இவ்வூர் மக்கள் பண்டிகை, நோன்பு காலங்களில் மிளகாய் அரைக்க மாட்டார்கள் மற்றும் உணவில் உப்பு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பது சிறப்புக்குரியதாகும்.
பழனி முருகனைப் போன்றே தண்டத்தை தாங்கி நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிய சன்னதியில் இத்தல முருகன் அருள்பாலிக்கிறார்.
வேறென்ன சிறப்பு?
இத்தலத்தில் ஏழரை அடி உயரம் கொண்ட லோக நாயக சனீஸ்வரர் பின்னிரு கைகளில் அம்பும், வில்லும் இருக்க... முன்னிரு கைகளில் கத்தியும், அபயஹஸ்தமும் கொண்டு நின்ற கோலத்தில் எழிலாக அருள்புரிகிறார். இவர் எதிரே அவரது வாகனமாகிய காகம் உள்ளது.
இங்குள்ள துர்க்கை அம்மனை மாகாளியம்மன் என்றே அழைக்கின்றனர்.
முன்மண்டப நுழைவு வாயிலின் இருபுறமும் துவராபாலகர்கள் காவல் புரிகின்றனர்.
நவகிரகம், தேவேந்திரன், முருகன், மாகாளியம்மன், நவநாகர், விநாயகர் ஆகியோருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதிகள் உள்ளன.
நவநாகர் சன்னதியில் ஆதிசேஷன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவரை சுற்றி வாசுகி, அனந்தன், குளிகன், கார்க்கோடகன், தக்கன், பதுமன், சங்கன் மற்றும் பாலன் ஆகிய அஷ்ட நாகங்கள் அருள்புரிகின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
மாரியம்மனுக்கு பங்குனி மாதம் 18 நாட்கள் நடைபெறும் உற்சவமே பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கந்தசஷ்டி, ஆடி கடைசி வெள்ளி, சனிப்பெயர்ச்சி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் ஆறு நாட்கள் நோன்பிருந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
நாகதோஷம் உள்ளவர்கள் நவநாகர் சன்னதியில் பரிகார பூஜை செய்து பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
வேண்டுதல்கள் நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.