குத்தாலத்தில் கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி மனைவி மற்றும் ஆண் நண்பர் கைது

குத்தாலத்தில் கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலிய தெருவை சேர்ந்த சரவணன் 30 இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்கிற தாட்சாயணி 25 என்பவருக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. கடந்த 5 ம் தேதி சரவணனை, மனைவி தாட்சாயணி மற்றும் அவரது ஆண் நண்பரான நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் 38 ஆகிய இருவரும் சேர்ந்து கட்டிப்போட்டு கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சரவணன் குத்தாலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் தாட்சாயணி,அவரது ஆண் நண்பர் ராஜசேகரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு முன்பே தாட்சாயிணிக்கும், ராஜசேகருக்கும் பழக்கம் இருந்ததும், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் தாட்சாயணி,சரவணனை திருமணம் செய்து கொண்டதுவும், திருமணத்திற்கு பிறகும் தாட்சாயிணி ராஜசேகருடன் தொடர்பில் இருந்ததை அறிந்து சரவணன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த தாட்சாயிணி,ராஜசேகர் இருவரும் சேர்ந்து சரவணன் கட்டிப்போட்டு தாக்கி கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

இதனை அடுத்து தாட்சாயிணி,ராஜசேகரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய குத்தாலம் போலீசார் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.