அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வலிவலத்தில் ஊராட்சியில் தலைவர் செ.மணிகண்டன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் இலக்கியா பழனிவேல் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பற்றாளர் வளர்மாலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கேற்ப மக்களுக்கு நீர் மிக அவசியம். 70 சதவீதம் நீரினாலும் 30 சதவீதம் நிலப்பரப்பை கொண்டுள்ள நமது நாட்டில் 2.5 சதவீதம் மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் உள்ளது இதில் மூன்றில் ஒரு பங்கு பாதுகாப்பற்ற சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்ட மாசுபட்ட தண்ணீரை பயன்படுத்துகிறோம் எனவே மக்கள் தண்ணீரை வீணடிக்காமல் தேவையான அளவிற்கு பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் கிடைக்கும் மழை நீரை முறையாக சேமித்து நிலத்தடி நீரை பெருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இதற்காக தமிழக அரசு பல திட்டங்களையும் அறிவித்துள்ளது அதை நமது ஊராட்சியில் முறையாக பயன்படுத்தி வரும் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இல்லாத ஊராட்சியாக மாற்றிட வேண்டுமென தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பேசிய விழிப்புணர்வு காணொளி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது

தொடர்ந்து ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் பொதுமக்களுக்கு வாசிக்கப்பட்டது கிராம சபை கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீ கமலி, கிராம நியாய விலை கடை பணியாளர் பழனிவேல், கிராம செவிலியர், அங்கன்வாடி பணியாளர், வார்டு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
